GTV News 22-08-2013 - Tamil News

GTV News - 22-08-2013, Eelam News, Tamil News, India News, Sri lanka News, Watch GTV News At nilatamil.com

தேவதாசிகள் இன்று இல்லையே எனக் கவலைப்படுவோருக்கு.. … . -கோவி.லெனின்


வலைகள் பலவிதம். நடிகை சொர்ணமால்யாவின் கவலை அதில் ஒருவிதம். அவருடைய பர்சனல் கவலைகள் பல இருக்கலாம். அது பற்றி நமக்குக் கவலையில்லை. பரதநாட்டியம் பயின்று டாக்டர் பட்டமும் பெற்ற கலைஞர் அவர். அதனால் அவர் கவலைப்பட்டது, பரதக் கலை பற்றித்தான். 


    ஒரு  கல்லூரியில் பேசும்போது, “முன்பு தேவதாசி முறையினால் பரதநாட்டியம் வளர்ந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்கள்” என்ற அர்த்தத்தில் கவலையோடு பேசியிருக்கிறார். அதாவது, தேவதாசி என்கிற பழங்கால முறை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டதால், பரதக் கலை வளராமல் போய்விட்டது என்று கவலைப்பட்டிருக்கிறார் சொர்ணமால்யா. 

    தேவதாசி முறை என்பது என்ன? அந்தக் காலத்தில் கோவில்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துப் பெண்களைக் கடவுள் தொண்டு என்ற பெயரில் தேவதாசிகளாக நியமித்துவிடுவார்கள். சதுராட்டம்  என்ற பெயரில் அவர்கள் கோவில் நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடுவார்கள். பெயர்தான், கடவுள் தொண்டு. நடைமுறையோ  வேறு. கோவிலை  நிர்வகிப்பவர்களும் ஊர்  பெரிய மனிதர்களும் தங்கள் விருப்பத்திற்கு அந்தப் பெண்களை பயன்படுத்திக் கொள்வார்கள். 

    தேவதாசியாக ஒரு பெண் நியமிக்கப்படுகிறார் என்றால் அந்தப் பெண்ணின் பாட்டியும் தேவதாசியாக இருந்திருப்பார். அதன்பின் அவரது அம்மாவும் தேவதாசிதான். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் பிறந்தாலும் அதே நிலைதான். கடவுளின் பெயராலும் ஆன்மீகத்தின்  பெயராலும் பரம்பரை பரம்பரையாக பாலின இழிவையும் பாலியல் கொடுமையையும் அவர்கள் அனுபவித்து வந்தார்கள். சமுதாயத்திலும் ‘தாசி’கள் என அவர்களுக்கு இழிவான பெயரே இருந்தது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக வெளிப்பட்ட அவர்களின் குமுறல்கள் அடக்கப்பட்டன. அல்லது நீடிக்க முடியாமல் அடங்கிப்போயின.
 
    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) உள்ளிட்டவர்கள் இந்த தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். பல தலைவர்களின் ஆதரவைப் பெற்றனர். குறிப்பாக, பெரியாரின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த இந்தியாவில், அன்றைய சென்னை மாகாணம் என்பது இன்றைய தமிழகம், ஆந்திரா, கேரளாவின் சில பகுதிகள், ஒரிசா  எல்லை ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்த மாகாணத்தை நீதிக்கட்சி ஆட்சி செய்துவந்தது. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான முத்துலெட்சுமிதான், சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர். 

    சட்டமன்றத்தின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி, தேவதாசி முறையை சட்டப்பூர்வமாக ஒழிப்பதற்கான மசோதாவை 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இந்த மசோதாவைப் பற்றியும் அதனை நிறைவேற்றுவது பற்றியும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்தார். எனினும், தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
 
    மசோதாவை எதிர்த்துப்பேசிய காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி, “தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய  காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதக்கலை அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்” என்றார்.

    அதற்குப் பதிலளித்த  டாக்டர் முத்துலெட்சுமி, “ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இது ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்றால், அதை ஒரு சமுதாயத்துப் பெண்கள்தான் செய்ய வேண்டுமா? அந்தத் தொண்டினை உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது? என்று சத்தியமூர்த்தியைப் பார்த்து சூடாகக் கேட்டார். கடுமையான எதிர்ப்புக்கு நடுவே சென்னை மாகாண சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதா நிறைவேறியது. இதன் மூலமாக, குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை பரம்பரை பரம்பரையாக கோவிலில் தேவதாசிகளாக்கி, பாலியல் கொடுமைக்குள்ளாக்கும் வழக்கம் ஒழிந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களில் இது மிகவும் முக்கியமானது. 

    கோவிலின் பெயரால், பாலியல் கொடுமையை சமூக வழக்கமாக்கி வைத்திருந்த ஆதிக்க சக்திகளிடமிருந்து பெண்களை மீட்டது தேவதாசி ஒழிப்பு மசோதா. தேவதாசி முறையை ஒழித்தால் பரதநாட்டியம் ஒழிந்துவிடும் என அன்று சத்தியமூர்த்தி பேசினார். அதே கருத்தைத்தான் இன்று ‘கவலை’யோடு பேசியிருக்கிறார் சொர்ணமால்யா.

    சென்னை மாகாணத்தில் அப்போதே தேவதாசி முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் அது தொடர்ந்தது. சில சமூகங்களில் வெவ்வேறு பெயர்களில் அது கடைப்பிடிக்கப்பட்டது. பருவமடைந்த பெண்களை கோயிலுக்குத் தேவதாசியாக்கி அங்கு ஆதிக்கம் செலுத்தும் ஆண்களின் இச்சைக்குப் பலியாக்கும் வழக்கம் தமிழகத்தின் எல்லை உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்வதை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும், படைப்பாளிகளும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தபடியே இருந்தனர். இந்த  வழக்கத்தை முற்றிலும்  ஒழித்து, அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை அரசும் அரசு சாரா நிறுவனங்களும் பல மாநிலங்களில் மேற்கொண்டு வருகின்றன. மும்பை அதற்கோர் உதாரணம்.

    ஸ்வேதா கட்டிக்கு இப்போது 18 வயதுதான். மும்பையின் பிரபல சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திபுராவில் ஒரு  தேவதாசிப் பெண்ணின் மகளாகப் பிறந்தவர். மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தேவதாசியாக்கப்பட்டு, தன் அம்மா படும் பாலியல் கொடுமையைக் கண்டு ஸ்வேதா பயந்தார். அவரது தாய் வந்தனாவும் தனக்கு நேரும்  கொடுமைகள்  தன் மகளுக்கு நேர்ந்துவிடக்கூடாது என நினைத்தார்.

    அருகிலுள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஸ்வேதா, சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படித்துவந்தார்.  காமத்திபுராவில் உள்ள இப்படிப்பட்ட பெண்குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தும், ‘அப்னே ஆப்’ என்ற அமைப்பு,  ஸ்வேதா நன்றாகப் படிப்பதை அறிந்து, அவரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்தது. அந்தப் பள்ளியிலேயே அவர் மேல்நிலை வகுப்புவரை நன்றாகப் படித்து தேர்ச்சியடைந்ததால், அப்னே ஆப் அமைப்பு ஸ்வேதாவை ‘க்ரண்ட்டி’ என்ற தொண்டு நிறுவனத்திடம் அழைத்துச்  சென்றது. நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் தன் இலட்சியக்கனவு என்று ஸ்வேதா தெரிவித்தார். பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்களிடமிருந்து உதவி பெற்றுத் தரும் நிறுவனமான க்ரண்ட்டி, ஸ்வேதாவுக்கு உதவ முன் வந்தது.

    அந்த  நிறுவனம் எடுத்த முயற்சிகளால், அமெரிக்காவுக்கு சென்று படிக்கும் வாய்ப்பை தற்போது பெற்றிருக்கிறார் ஸ்வேதா. உலகம் முழுவதுமிருந்தும் 200க்கும் அதிகமானவர்கள் ஸ்வேதாவின் கல்விக்காக நிதியுதவி அளிக்த்துள்ளனர். அதன் மூலமாக அமெரிக்காவில் உளவியல் துறையில் படிக்கப் போகிறார் ஸ்வேதா. அவருக்கு சக மாணவிகளின் வாழ்த்துகள் குவிந்தபடி இருக்கின்றன.

    ஸ்வேதாவின் அம்மா வந்தனா, “அவள் அங்கே என்ன படிக்கப்போகிறாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவள் என்கூட இருக்கப்போவதில்லை என்பது புரிகிறது. ஆனாலும்  அவளது நிலை கண்டு நான் மனரீதியாக பலமடைந்துள்ளேன்” என்று சொல்லியிருக்கிறார். தன்னுடன் தனது குடும்பத்தைப் பீடித்திருந்த இந்த ‘தேவதாசி’ கொடுமை முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும் தன் மகள் இந்தப் பாழுங்கிணற்றில் விழவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதுபோல இருந்திருக்கிறது வந்தனாவின் குரல்.

   அன்று மூவலூர் ராமாமிர்தமும், டாக்டர் முத்துலட்சுமியும் இழிவுபடுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்தவர்கள். அந்த இழிவை எதிர்த்துப் போராடினார்கள்.  வென்றார்கள். ஆனால் சத்தியமூர்த்தி போன்றவர்கள், “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் பரதநாட்டியம் ஒழிந்துவிடும்” என்றார்கள். இன்று வந்தனாவும் அவர் மகள் ஸ்வேதாவும் தேவதாசி குலத்திலிருந்து மீள்வதற்குப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் சொர்ணமால்யா போன்றவர்கள், “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதால் பரதநாட்டியம் வளரவில்லை” எனக் ‘கவலை’ப்படுகிறார்கள். தேவதாசிகள் என்ற முறை எதற்குப் பயன்பட்டது, பயன்படுகிறது என்பதற்கு ரத்தமும் சதையுமாக சாட்சிகளாக இருக்கிறார்கள் வந்தனா போன்றவர்கள்.

    சத்தியமூர்த்தியைப் பார்த்து டாக்டர் முத்துலட்சுமி, “கடவுளுக்கும் கலைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றால் அந்தத் தொண்டினை உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது?” என்று சட்டமன்றத்தில் சத்தமாகக் கேட்டார். சொர்ணமால்யாக்களைப் பார்த்து வந்தனாவும் ஸ்வேதாவும் கேட்காமல் கேட்கிறார்கள்.

Deepam Tv News 28-07-2013

Watch Deepam Tv News 28-07-2013, Tamil News, Deepam Tv

Puthiya Thalaimurai News 24-07-2013

Puthiya Thalaimurai News 24-07-2013

Powered by Blogger.